" பரிபூரண நித்தியம் நீயே !"

வணக்கம் ஜியெம்.! புற பயணத்தில் நிறைவு தேடி வாழ்நாள் முழுவதும் அலைந்து… இறுதியில் சோகமும், களைப்புமே மிஞ்சியது எனக்கு ! அகபயணம் ஒன்றே நான் தேடியதை சரியாக காட்டும் என தற்போது நண்பரால் அறிந்து தங்களிடம் என் சோகம் களைய வந்துள்ளேன். இந்த அக உலக பயணத்தில் முதல் அடி எடுத்து வைக்கும் எனக்கு தாங்கள் கூறும் அடிப்படை போதனை என்ன? நான் செய்ய வேண்டியது என்ன? என தாங்கள் விளக்குவீர்களா?

May 7, 2022 | 168 views

ஜியெம்:  உண்மை எங்கு உளது?

உண்மை என்பது எது?

காணும் காட்சிகளா?

காட்சிகள் உண்மை என்பதால்தான் நீ அங்கும் இங்கும் அலைகிறாய் வெளியே!

நீ காணும் காட்சிகளில் ஒரு துளி உண்மை கூட இல்லை என நீ அறியாய்!

உண்மை வெளியே இல்லை!

உன்னுள்ளேயே உள்ளது!

தற்போது!

எல்லை அற்றது!

வடிவத்திற்கு அப்பாற்பட்டது.

உனது நோக்கம் உன்னைப் பற்றிய உண்மையை அறிவது என்றாயின்,

உன்னுள்ளே செல்வதை தவிர, நீ வேறு எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை!

தன் அகத்தே இருக்கும் உண்மையை அறிய முதலில், கண்களை மூடி உள்ளிருக்கும் அமைதியில் நிலை கொள்ளுதல் அவசியம் என அறிய வேண்டும்!

கண்களை மூடி அறியப்படும் அமைதியில் உன் இருப்பு உனக்கு தெரியும் வார்த்தைகள் இல்லாமலே!

இதுவே சுய அறிவு!( I am ness, Consciousness)

இந்த அறிவு இயல்பாகவே அறியப்படுகிறது. எவ்வித முயற்சியும் தேவையில்லை உன் இருப்பை அறிய!

ஏனைய அறிவு அனைத்தும் உனது வடிவம் சார்ந்த அடையாளங்கள், பிரபஞ்சம் சார்ந்த அடையாளங்களே!

அவை எதுவும் நீ அல்ல!

உபயோகத்திற்கு மட்டுமே என அறியவும்.

கண்களை மூடி அறியும் அமைதி எல்லை அற்றது.

அமைதியில் வடிவங்கள் இல்லை!

இதுவே எல்லை அற்ற நான் எனும் இருப்பு!

இந்த இருப்பில் தான் அகிலம், பிரபஞ்சம் , அனைத்து தோற்றங்களும் மறை நிலையில் உள்ளன.

கண்களை திறந்து பார்க்கும் வடிவம் நீ அல்ல!

கண்களை மூடி பார்க்கும் உள்ளிருக்கும் அமைதியே நான் எனும் சுய அறிவு( consciousness) என அறியவும் தற்போது.

அமைதியில் நிலைக்கும் போது,

இந்த வடிவம் நானல்ல!

வார்த்தைகளும் நானல்ல!

காணும் காட்சிகளும் நானல்ல!

நிகழும் நிகழ்வுகளும் நானல்ல!

நான் வடிவத்திற்கும், வார்த்தைகளுக்கும், காட்சிகளுக்கும், நிகழ்வுகளுக்கும், அப்பாற்பட்ட சுய அறிவு என அறியப்படும்…..

அமைதி நிலவும்!

ஆனந்தம் தொடரும்!

தன்னிலையில்!

தன்னிலையில் தொடர்ந்து நிலைத்தால், தன் இருப்பின் ஆதாரமான, தன் அற்புத உன்னதத்தை, தன் முழுமையை, பரிபூரணத்தை அறியலாம்!

அமைதியில் அனைத்தையும் கவனிப்பதை தவிர செய்ய வேண்டியது எதுவும் இல்லை என அறியவும் தற்போதாவது.!