" பரிபூரண நித்தியம் நீயே !"

வணக்கம் ஜியெம், உலக அளவு நிகழ்வுகளில் , உள் பயணம், மற்றும் வெளி பயணத்தில் சிக்கி கொண்டு விடுவேனோ என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது.

August 7, 2023 | 50 views

ஜியெம்: இக்கேள்வி, தனித்த அடையாளத்தில் கேட்கப்படுகிறது.

உன் சுய அறிவே இக்கேள்வியை தான் தனித்து இருப்பதாக ஒப்புக்கொண்டு தடுமாற்றத்தில் கேட்கிறது.

உலகம் எங்கே உள்ளது?

உன் சுய அறிவில் (I am ness’ Consciousness) தானே!

உன் சுய அறிவில் தான் தற்போது உலகமும், அனைத்து நிகழ்வுகளும் தானாக நிகழ்கிறது!

இங்கு உன் சுய அறிவில் தான் அனைத்து வடிவங்களும், உன் வடிவம் உட்பட நிகழ்கிறது தற்போது!

சுய அறிவே அனைத்திலும் இயங்குகிறது எனில், அனைத்து நிகழ்வுகளும் தானாகவே நிகழ்கிறது எனில், இங்கு எது உனக்கு அந்நிய மாக உள்ளது?

வெளி பயணம் என்பது அடையாளங்களை சார்ந்தது.
அடையாளங்கள் நீ அல்ல!

உள் பயணம் என்பது, கண்களை மூடி அமைதியில் நிலை கொள்ளுதல்…

கண்களை மூடவும் தற்போது.
இங்கே எது உள்ளது என சொல்லவும்?

உள்ளே அமைதியும், ஆனந்தமும் உள்ளது.
அவை எவ்வாறு தடையாக இருக்கும்?

உன் சுய அறிவை , உன் இருப்பை தவிர இங்கு எது உளது?

உள்ளே, உன் இருப்பு வடிவம் அற்ற,
எல்லை அற்ற நிலையில் அமைதியாக இருக்கிறது.

அசைவற்ற நிலையில் ஆனந்தமே!

கண்களை மூடி பார்க்கும் அமைதி நிலையே, கண்களை விரிக்கும் போது பரவெளியாகவும், அதில் நிகழும் பிரபஞ்சம், கோள்கள், அகிலம் , மற்றும் அனைத்து வடிவங்களாக வும், காட்சி அளிக்கிறது!

இந்த பரத்தில் (space) காணும் அனைத்து பொருள்களும், நிகழ்வுகளும், உனது சுயத்தில் தானாக நிகழ்கிறது.

உன் சுயம் இன்றி பரம் இல்லை!
பரம் இன்றி பொருள் இல்லை!

இங்கு எது உனக்கு தடையாக இருக்கிறது?

எண்ணங்கள் தான், என்றால் அவை எங்கே தோன்றுகிறது?

உன் சுய அறிவின்றி, எண்ணங்கள் நிகழுமா?

நீ சுய அறிவு தானே!
எண்ணங்கள் நீ அல்லவே!

உன் சுய அறிவு உயிர்ப்பானது.!
எண்ணங்களுக்கு இருப்பு இல்லை!

உன் இருப்பில் தான் அவை தோன்றுகிறது, எனில் அவை நீ அல்லவே!

எண்ணங்கள் உபயோகத்திற்கு மட்டுமே.

எண்ணங்கள் எப்படி உனை தாக்கும்?

உயிர்ப்பான நீ உயிர்ப்பற்ற எண்ணங்களுக்கு அடிமை ஆகலாமா?

இங்கு அனைத்தும் தானாகவே நிகழ்கிறது எனில்,

விழிப்பு, உறக்கம், கனவு உட்பட…

கனவும் தானாகவே நிகழ்கிறது…
நீ ஏதேனும் முயற்சிக்கிறாயா?

விழிப்பும் தானாகவே நிகழ்கிறது!
நீ ஏதும் முயற்சிக்கிறாயா?

மூச்சு விடுதல் முதல், இதயத்துடிப்பு வரை ….
நீ ஏதேனும் முயற்சிக்கிறாயா?

முயன்று பார்!

உன் முயற்சியே தடையாக உள்ளதை அறிவாய்!

சுய அறிவு தானாக நிகழ்கிறது தற்போது!

சுய அறிவில், பிரபஞ்சம், அகிலம் அனைத்தும் தானாகவே நிகழ்கிறது உன் வடிவம் உட்பட தற்போது!

செய்பவர் யாரும் இல்லை!

அனைத்து நிகழ்வுகளும் தானாகவே நிகழ்கிறது தற்போது என அறிந்தால்,
உனது எண்ணங்களுக்கு வேலை இருக்காது தற்போது.

தடுமாற்றமும் இருக்காது!

அமைதியாக நிகழும் நிகழ்வுகளை அமைதியாக கவனித்தால், இப்போதே, உலகம் எனும் கனவில் இருந்து விழிக்கலாம்!

விழித்தால் ஆனந்தமே!

🌺🌹🌺